ஸ்ரீ அருள்மிகு வடபத்ரகாளியம்மன் துணை
ஓம் சக்தி
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் அணிபுனைந்த வணியே!
அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே!
பிணிக்கு மருந்தே! அமரர் பெரும் விருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!
பரத்வாஜ ஆஷ்ரமம் என்ற வரலாற்று புகழ்பெற்ற புண்ணியஸ்தலம் முடிகொண்டான் என்னும் கிராமம்
முடிகொண்டான் கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று
இக்கிராமத்தின் கிழ்பகுதியில் கைகோளர் தெருவில் உள்ள ஸ்ரீ அருள்மிகு வடபத்ரகளியம்மன் மடம்
இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அருள்மிகு வடபத்ரகாளியம்மன் இவ்வூர் கிராம மக்களால் ஆராதிக்கபெற்று அனைவருக்கும் அன்னையாகி ஆதிசக்தியாய் இருந்து ஒன்பது நூற்றாண்டு காலமாக அருள் பாலித்து வருகிறாள்.
முடிகொண்டான் அருள்மிகு வடபத்ரகாளியம்மன் புராண வரலாற்று சுருக்கம்
முடிகொண்டானில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அருள்மிகு வடபத்ரகாளியம்மன் சுமார் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகவும் தொன்மை வாய்ந்த பண்டையகாலத்து அரச வம்சத்தினரால் மலையாள பகவதியாக பூஜிக்கப் பெற்ற மாபெரும் மகாசக்தி பலி தேவதை, பண்டைய மன்னர்களால் போற்றி பூஜிக்கப்பட்ட அன்னை முகமதியர்களின் படையெடுப்பால் தொடர்ந்து பூஜிக்க முடியாமல் சிதிலமாகி போகும் நிலையில் அம்மனர்களால் பாதுகாக்கப்பட்டு ஓலைசுவடிகளின் விபரங்களோடு பேழையினுள் வைக்க பெற்று ஆற்றில் வந்தது என்பது தான் செங்குந்த வம்சத்தினரின் முன்னோர்களது கூற்று.
ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பாக திருமலைராஜன் ஆற்றின் கரை ஓரமாக அழகிய பெரிய பேழை ஒன்று மிதந்து வந்ததை பரபரப்புடனும் ஆச்சிரியத்துடனும் கண்ணுற்றனர் அவூர் கிராமவாசிகள்.
அவ்வரிய காட்சியினை காண அக்கிராம மக்கள் அனைவரும் ஆற்றின் கரையோரம் கூடினர்.
இந்நிலையில் சிலர் பேழையை நெருங்கி எடுக்க முற்பட்டபோது பேழை விலகி விலகி தொலைவில் சென்றது.
இதை கண்ணுற்ற மக்கள் மேலும் துணுக்குற்றனர் மருண்டனர்.
அப்பொழுது சக்தி பூஜை செய்து வரும் செங்குந்த மரபினை சார்ந்த குடும்பத்தினர் பேழையை பற்றி எதுவும் தெரியாத நிலையில் அன்னை பராசக்தியை வேண்டி, அம்மா எது என்ன வினோதம் இப்பேழை இவ்வூருக்கு வந்தது நன்மைக்கோ! தீமைக்கோ அறியோம்! நல்லதே செய்து நன்மையே நடக்குமாயின் இப்பேழை வரட்டும் என்று அன்னையை நோக்கி மனமுருகி தியானம் செய்ய பேழை கரை நோக்கி அருகே வந்து நின்றது.
அனைவரும் ஆரவாரமாய் பேழையை நெருங்கி அதை கரைக்கு கொண்டு வந்தனர், அனைவர் முன்னிலும் பேழையை திறக்க அதனுள் தெய்வீக வடிவாய் பரலோக பூஜிதா வாகிய அன்னை தனது சிரசுடனும் அஷ்டபுஜங்களுடனும் சூலம் கபாலங்களுடனும் ஓலைசுவடிகளுடனும் பாதுகாப்பாய் காட்சியளித்தாள் என்பது முனோர்களது வாக்கு.
ஓலைசுவடிகளின் சாரம்
அதாவது பேழையினுள் இருக்கும் அன்னைக்கு பூஜை செய்வோருக்கு தரப்பட்ட விபரம் "பேழையினுள் இருக்கும் அன்னை பலி தேவதையானவள் அன்புடன் ஆராதிப்பவர்களை அருட்கண் ஆயிரம் கண்ணோடு நோக்கும் ஆதிசக்தி. பக்தர்களை பாரபட்சம் பாராது காக்கும் பத்ரகாளி.
இந்த அன்னைக்கு தலைபிள்ளையை சுமக்கும் கர்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் தலை பிள்ளையை பலி கொடுத்து பிறகு அன்னதானங்களோடு பூஜிக்க வேண்டும் என்பது சுவடியின் சாரம்.
இவ்விபரத்தை பார்த்து துணுக்குற்ற குடும்பத்தினர் "அம்மா இது என்ன வினோதம்! இது எப்படி சாத்தியம்! என்று கலகத்துடன் அன்னையை நோக்கி தலைபிள்ளையின் ஒரு துளி இரத்தத்தை வேண்டுமானால் திலகமாய் இட்டு பூஜை செய்வோம் என மனமுருகி கேட்க "அப்படியே ஆகட்டும்" என ஒரு பெண்ணின் குரல் அசரீரி போன்ற ஓசையுடன் எழ கிராம மக்கள் ஆனந்த களிப்புடன் அன்னை பத்ரகாளியின் பேழையை மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கிராமத்திற்கு எடுத்து சென்றனர்.
செங்குந்த மரபினைச் சார்ந்த குடும்பத்தினர் தங்கள் இல்லங்களிலேயே அன்னையை பூஜித்து வழிபட்டனர். அக்குடும்பத்தினர் பல குடும்பகளாக பெருகிய பட்சத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றி அன்னையை யார் வைத்து கொள்வது என்ற பிரச்னை தோன்றி முடிவில் ஒரு மடத்தில் அன்னையை வைத்து அனைவரும் வழிபட்டனர்.
அப்படி இருக்கையில் அன்னை பத்ரகாளியை வடக்கு முகமாக பார்த்து வைத்து வடபத்ரகாளியாய் வழிபட்டனர்.
அன்னை வடபத்ரகாளி அக்குடும்ப மூதாதையர் ஒருவர் கனவில் தோன்றி "தற்பொழுது நான் தனியாக இருக்கிறேன் என்னுடன் துணையாக எனது சகோதரியும் மற்றுமொரு பேழையில் வந்தனள் அவள் வெகுதூரம் சென்றுவிட்டாள்,
அவள் துணையின்றி என்னால் தனிமையில் இருக்க இயலாது , எனக்கு துணைவேண்டும்" எனகூறி மறைந்தனள். அவ்வண்ணமே அந்த பக்தர் தன் குடும்பத்தாருடனும் கிராமத்தினர் அனைவருடனும் கலந்து பேசி பேழையினுள் உள்ள அன்னையைப் போல மற்றொரு அம்பாளை ஆகமவிதிப்படி செய்துவந்து பூஜை முறைகளை பின்பற்றி இரண்டு அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.
காலப்போக்கில் தினமும் அம்பாளுக்கு பூஜைசெய்ய இயலாத பட்சத்தில் அன்னை இருவரையும் வேண்டி, ஒரு வருடத்திற்கான அன்னங்கள் மற்றும் பழவகைகள், அன்னை இருவருக்கும் வேண்டிய அனைத்தையும் பெரும்பான்மையாய் வைத்து பூஜை செய்து அன்னை இருவரையும் பேழையினுள் வைத்து "அம்மா வடபத்ரகாளி எங்களை பொருத்தருள்" தினமும் தங்களுக்கு பூஜை செய்ய இயலவில்லை, அதனால் இனி தங்களின் சூலம் கபாலத்திற்கு மட்டும் அராதனை செய்கிறோம். தாங்கள் இருவரும் வருடத்திற்கு ஒருமுறை எங்கள் அனைவரது இல்லங்களிலும் எழுந்தருள வேண்டும்.
தங்களுக்கு தலைபிள்ளையின் இரத்தத்தை திலகமிட்டு வரவேற்கிறோம்.
தாங்களும் மறுக்காமல் எங்கள் வேண்டுதலை ஏற்று இக்கிராமத்தினர் அனைவரது வீட்டிற்கும் திருவீதியுலா வந்து எங்களை காத்து ரட்சித்து அருள் பாலிக்க வேண்டும் "என்று மனமுருகி வேண்டினர். அன்னையும் அம்மக்களின் வேண்டுதலை செவி சாய்த்து அவ்வண்ணமே வருடத்திற்கு ஒரு முறை திருவிழா கோலத்துடன் இன்முகம் கொண்டு குதூகலத்துடன் திருவீதியுலா காட்சி தந்தருளுகின்றனர்.
மேலும் இந்த முடிகொண்டான் வடபத்ரகாளியம்மன் மடத்தில் கடந்த பதினைந்து வருடங்களாக ஐம்பொன்னாலான இரு அம்பாள் விக்ரகங்களை சிறிய அளவில் குழந்தைரூபமாக பிரதிஷ்டை செய்து சூலம் கபாலங்களுடன் அவ்விரு அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன,
இந்த அன்னையின் பூஜை பொறுப்பினை செய்பவர்கள் செங்குந்த கைகோளர் வம்சத்தினரே.