தமுக்கம் - மதுரையின் பல முக்கிய போராட்டங்களைக் கண்டிருக்கிறது. ஒருவகையில் மதுரையின் மையப் பகுதியும் கூட. மிகச் சில மாணவர்களுடன் ஜனவரி 17-ம் தேதி இங்கே தொடங்கிய போராட்டம் ஜனவரி 18-ம் தேதி முதல் மதுரையை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டமாக உருவெடுத்தது.
ஒருகாலத்தில் எல்லா ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கும் இவ்விடத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பின்னர், மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது. ஆயினும் கூட தி.மு.க., அ.தி.மு.க. போன்ற ஓட்டுப் பொறுக்கி கட்சிகளுக்கு அனுமதி வழங்கி வந்தது.
தடையை மீறி போராட்டம் என்றால் அது தமுக்கத்தில்தான் என்னும் அளவிற்கு போராட்டக்காரர்களுக்கு அவ்விடத்தின்மீது ஒரு காதல் உண்டு.
"இறுதி யுத்தத்தின்" போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவான 2009-ஆம் ஆண்டின் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பேரணி இங்குதான் தொடங்கியது. நான்காண்டுகளுக்கு பிறகு, 2013-ஆவது ஆண்டின் ஈழ ஆதரவு மாணவர் போராட்டங்களில் பலவும் இங்குதான் நடைபெற்றது. மீண்டும் நான்காண்டுகளுக்கு பிறகு, தற்போது 2017-இல் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமாக இங்குதான் போராட்டம் மையங்கொண்டுள்ளது.
எனவே, தமுக்கம் போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
ஆகவே, அமெரிக்காவின் "வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" போராட்டத்தின் பெயரைத் தழுவி, தமுக்கத்தில் நடைபெறும் இப்போராட்டங்களுக்கு, "தமுக்கத்தை கைப்பற்றுவோம்" என பெயரிட்டிருக்கிறது.
ஜனவரி 18 எழுச்சியில் ஒன்றுகூடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமின்றி, சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்காகவும், தேவைப்படும் போதெல்லாம் "தமுக்கத்தைக் கைப்பற்றுவோம்" என உறுதியேற்றுக் கொண்டுள்ளார்கள்.